Saturday, October 30, 2010

இசையோடிணைந்த வாழ்வு

விடிகாலை பூசாரி, வியர்வை சிந்தும் ஆசாரி,
எல்லைப் போராளி, நள்ளிரவு உழைப்பாளி ,    
சிகையழகு கலைஞன், கணினி இளைஞன்,
என எல்லோர் வாழ்விலும்
பக்திப் பாடலாக, பண்பலை கீதமாக
பதிவுத் தகடாக இசை
நீக்கமற நிறைந்துள்ளது.

என்  இயந்திர வாழ்விலும்
இசைப்பஞ்சம் வரப் போவதில்லை, 
என்னிடத்தில்
'அப்புறம்' மற்றும் அலைபேசியும்,
உன்னிடத்தில்
அந்நாள் சம்பவக் கதைகளும் 
இருக்கும் வரையில்...

Wednesday, October 20, 2010

ஒற்றைப் பனை

அப்பாவின் மடியில் அமர
சண்டையிடும் குட்டித் தங்கை,
அளவில்லா செல்லம் தந்து
அரவணைக்கும் அன்பு அண்ணன்,
சீருடை அணிவித்து சின்னதாய்
கண்டிக்கும் அழகு அக்கா,
பஞ்சு மிட்டாய் பஞ்சாயத்திற்காய் 
கிள்ளி வைக்கும் குறும்பு தம்பி,
என எவருமில்லா தனி வீட்டில்
செப்புச் சாமான்கள் மற்றும்
பொம்மைகளுடன் எதிர் வீட்டைப் 
பார்த்து ஏங்கிக் கொண்டிருந்தாள்
ஒற்றையாய் பிறந்த ஷ்ரேயா குட்டி..

Sunday, October 3, 2010

வலியது உன் விழியது

தரையில் படுக்க வைத்து
நெற்றிப்  பொட்டில் தண்ணீரை
சொட்டு சொட்டாய் ஊற்றுதல் ,
உணவு உறக்கம் மறுத்தல்,
கழுவேற்றுதல் என விதவிதமாய்
தண்டனைகள் பல உண்டு. 
ஆனால், 
கருட புராணம் கூட
கண்டிராத சித்ரவதை,
உன் கயல்விழிகளின்
நடன உற்சவத்தின் போது
உன் செவ்வாய் கவிதைகளை
கவனிக்கச் சொல்வது...

Thursday, September 23, 2010

மனிதம் வென்ற அவசரம்

நெரிசல் மிகுந்த சந்திப்பு ஒன்றில்
நலிந்து போன சிறுமி ஒருத்தி
உறுமும் வாகனங்களுக்கு மத்தியில்
சிறு வளையத்துடன்  வித்தை
காட்டிக்  கொண்டு இருந்தாள்.
ஈரம் கசிந்து எடுத்த சில்லறைகளை
கொடுப்பதற்குள் கடந்து விட்டார்கள்.
எல்லோரும் விரும்பிய பச்சை விளக்கு
அவள் சிற்றுணவிற்கு மட்டும்
சிவப்பு விளக்காய்...

Sunday, September 12, 2010

அழைப்பு

மரணத்திற்குப்  பிறகு
ஆன்மா எங்கே  செல்லும்
எனத் தெரியவில்லை.
ஆனால்,
வாகனத்தில் செல்லும் போது 
வேகமுள் எல்லையைக் கடக்கும்
எல்லாத் தருணங்களிலும் தெரிகிறது
விபத்தில் மரித்த நண்பனின் முகம்.

Thursday, September 9, 2010

ஊமைக் கனவுகள்

கீழே மேலே செல்லாமல்
வறுமைக் கோட்டிற்குள் வாடகை
இருக்கும் நடுத்தரக் குடும்பங்கள்.
தினமும் மலர்ந்து சருகாகும்
ஈசலைப் போன்றது எங்கள் கனவுகள்.

பட்டுப் புடவை மீதான அம்மாவின் ஏக்கம்
தொடர் நாடகங்களின் கண்ணீராய் கரைகிறது.

புது வாகனம் வாங்கும் அப்பாவின் ஆசை முன்பு
பாட்டியின் மருத்துவச் செலவு பல் இளிக்கிறது.

குட்டித்தம்பியின் இன்பச் சுற்றுலாவிற்கு
குடக்கூலி வந்து குடைச்சல் தருகிறது.

தாவணிக்கனவுகளுடன் தங்கைகள் இருப்பதால்
அண்ணனின் காதல் அடகு வைக்கப்படுகிறது.

கேக் வெட்ட ஆசைப்படும் பிறந்த நாட்கள்
ஆரஞ்சு மிட்டாயுடன் அமைதியடைகிறது.

தினசரி குளிக்கும் ஆசை கூட
தண்ணீர் வண்டியின்  பின்னால்
வரிசையில்  காத்திருக்கிறது.

விரக்திகளில் வீழாமல்,
விடியலுக்காய் போராடும் 
எங்களின் நம்பிக்கை 
அரிதாக அருளும் கடவுளும்,
அடுத்த தலைமுறைக்  கல்வியும்...

Sunday, August 29, 2010

ஒரு மென்பொறியாளன் புலம்பல்

விடிகாலை விழித்து, வெந்நீரில் குளித்து,
வேகாத உணவினை விரும்பாமல் புசித்து,
வாகன நெரிசலில் சாரலில் நனைந்து,
வேண்டா  வெறுப்புடன் தொடங்குகிறது  அந்நாள்.

புரியாத மொழி பேசும் கணினியை முறைத்து,
பிழையான வேலைக்காய் தன்மானம் தொலைத்து,
உறவுகள் மறந்து உழைப்பதன் பலன்
மூக்குக்கண்ணாடியும், கொஞ்சம் முதுகு வலியும்.

பணி நிமித்தமாய் வெளிநாடு சென்ற நண்பன்
புதுப்புது இடங்களில் விதவிதமாய்
ஃபேஸ்புக்கில்  சிரிக்க, பெங்களுரைத் தாண்டாத
விரக்திகள்  எரிச்சலைக்  கிளப்புகிறது.

சென்னை வெயிலின் திடீர் மழையைப் போல
சென்ற வாரம் பணியில் சேர்ந்த தேவதைக்கு
காதலன் இருப்பதாய் கேட்டறிந்த உடனே
பளிச்சென எறிந்த பல்புகள் அணைகிறது.

பாசமாக பேசும்,  பணிச்சுமை திணிக்கும்,
உயர்வாகப் பேசி குறைவாக மதிப்பிடும்,
அன்பான மேலாளரிடம்  கேட்க தோன்றுகிறது
"நீங்க நல்லவரா? கெட்டவரா ?".

அலுவலக அரசியல் புரியாமல் விழித்து,
அறிவுக்கெட்டா தர்க்கங்களில் 'புரிந்தது'
போல நடித்து, வீட்டிற்கு செல்வதற்குள்
"செல்லமே" கூட முடிந்து விடுகிறது. 


செம்மறி ஆடுகள்
பலிக்காக நேந்து விடப்படுகின்றன.
மென்பொறியாளர்கள்
பணிக்காக நேந்து விடப்படுகிறார்கள்.

Friday, May 28, 2010

ஏதேன் தோட்டத்து கதை

ஆதாமுக்கும் ஏவாளுக்கும் நிச்சயதார்த்தம்
அடுத்த மாத இறுதியில் சுபமுகூர்த்தம்
ஆனந்த வைபோகத்தின் ஆரம்ப விதை
இது சந்தோஷக்காலத்து நிகழ்வுகளின் கதை.

தமிழில் தொடங்கி செப்பு மொழிகள் பத்தாமல்
அலுவலகத்தில் 'ஜாவா'விலும்  ஏவாள் பெயர்
எழுதிப் பார்த்த வழக்கில்  மேலாளரிடம்
அசட்டுப்  புன்னகை புரிகிறான் ஆதாம். 

மணநாளில் அணிய வேண்டிய நகை,
புடவை, அலங்காரங்களைப் பற்றி
அளவில்லா முனைப்புடன் சானியா மிர்சா
போல சிந்தனை செய்கிறாள் ஏவாள்.

"மடிவதாயினும் மது, மாமிசம் உண்பேன்" என்று
குடிகாரர்கள் சபையில் உறுதி  பூண்ட  ஆதாம்,
நண்பன் கொடுத்த  மது  விருந்தில் கூட ஏவாள்
சைவம் என்பதால் ஆப்பிள் மட்டுமே தின்கிறான்.

நுண்ணறிவுடனும், நினைவுத்திறனுடனும்
இருந்த ஏவாள் கொடியில் காயும் துணியுடன்
தனியாக நகைத்து பேசுவதைப் பார்த்து
அச்சமடைகிறார்கள் ஏவாளின் அறைத்தோழிகள்.

வங்கியில் சேமித்த பணம் அலைபேசி கட்டணத்திற்கே
பத்தவில்லை என்பதால் திருமணத்திற்கு
கடன் வாங்க கலாநிதி மாறன் வீட்டில் காத்திருக்கிறார்
இருவரையும் படைத்த அப்பாவி கடவுள்...

Thursday, May 13, 2010

பெண் என்பவள் என்னவள்

ஆள் அரவமில்லா  சாலையைக்
கடக்கையிலே தூரத்து ஒலிப்பான்
சத்தத்திற்கு நீ என் கைகளை இறுகப்
பற்றியதன் பெயர் 'அச்சம்' என்றால், 

பத்து நிமிடமாய் பதில் வராத
குறுந்தகவலுக்காய் பல நூறு முறை
என்னை மனதுக்குள் திட்டிய
பகைமையின் பெயர் "மடைமை" என்றால்,

அணிந்த புதுப் புடவையை என்னிடம்
காட்டி 'அழகாய் உள்ளதா?' எனக்கேட்டு
கன்னம் சிவக்க கண் பார்க்க
தவிர்ப்பதன் பெயர் "நாணம்" என்றால்,
 
விரக்தியின் வலி விழியைக்
கடப்பதற்குள் அன்னையைப்
போல் அரவணைக்கும்
மென்மையின் பெயர் 'பயிர்ப்பு' என்றால்,

வேதங்கள் கூறும் பெண்ணும்
உன்னைப் போல் இனியவளாக
இருந்திருக்கக் கூடும் என்றே
நம்பத் தோன்றுகிறது...

Monday, May 10, 2010

ஒரு 'டூக்காவும்' ஒரு 'பழமும்'

அன்பின் உச்சம் கோபம் என்பதால்
அம்மா அப்பாவிற்குள் சண்டைகள் புதிதல்ல.

வேதனையோடு விடிகிறது அந்த பொழுது.
எதிர்பார்ப்புகள் தந்த ஏமாற்றங்கள்
கடும் சொற்களாய் வெடிக்கிறது,
வாக்குவாதங்களின் தீவிரத்தில்
இருவருமே சளைக்கவில்லை.
கோபங்கள் கொட்டிய பின்பு
மௌனங்கள் மட்டுமே மிச்சம்.
விதைத்தவர்கள் மோதலில்
வெப்பம்  என்னைத்  தாக்குகிறது.
விவரம் அறியாத மருத்துவர் அதை
கடுங்குளிர்க் காய்ச்சல் என்கிறார்.
என்னைப் பார்த்து  அழும் அம்மாவை
அன்பாக தேற்றுகிறார் அப்பா,
சற்று முன்பு நடந்த யுத்தம்
சத்தமில்லாமல் முகவரி தொலைக்கிறது.
இது தான் இல்லறம் என்பது
விளங்காமல் விழிக்கிறேன் நான். 

மன்னிப்பின்றி மடியும் சண்டைகள்
புரிவதில் அம்மா அப்பாவும்
சிறு பிள்ளைகள் தான் போல!