Sunday, May 4, 2014

உறவுகளும் பிரிவுகளும்

தாய் மண்ணைத் தாண்டிராத என்னை
வெளியூர்க் கல்லூரி விடுதியில்
அப்பா விட்டுச் சென்ற போது
அழுததாய் ஞாபகம்,
வலித்ததாய் ஞாபகமில்லை.

பால்யம் தொடங்கி பருவம் வரை
என்றுமே இணைபிரியா உயிர்த்தோழன்
பணி நிமித்தமாய் பிரிந்து செல்கையில்
மகிழ்வோடு வாழ்த்தியதாய் ஞாபகம்.

ஒருமித்த ரசனையும் சிந்தனையும் கொண்ட
ரயில் சிநேகிதி பயணம் முடிந்து
பிரிகையில் புன்னகைத்ததாய் ஞாபகம்.

தவிர்க்கப்பட்ட அன்பினாலோ,
வேறுபட்ட கருத்தினாலோ,
வெறுக்கப்பட்ட குணத்தினாலோ,
மனம் கசந்து பிரிந்த பிறகு
தற்செயல் சந்திப்பின் போது கூட
சம்பிரதாயப்  புன்னகை மறுக்கப்படும்
தருணத்தில் விளங்கியது,
பிரிவை விட பெரும் ரணம்
பிரிவின் காரணம் என்பது...