Tuesday, December 14, 2010

கடவுள் ஏன் கடுப்பானார்?

நகர்வலம் வந்த கடவுளும் நானும்
நலம் விசாரித்துக் கொண்டோம் .  
அவரது படைப்பில் நான் வெகுவாக
ரசித்தவை பற்றி சொல்லச் சொன்னார்.

உறை மீளும் வாளின் ஓலியைப் போன்று  நீ
"ம்ம்க்கும்ம்"  சொல்வது பிடிக்கும் என்றேன்.
மேற்கத்திய உடையிலும் நெற்றியில் சிரிக்கும்
மெலிதான பொட்டினை ரசிப்பேன் என்றேன்.

அரக்கு பட்டுச் சேலையில் நான் பார்த்த
முதல் வெட்கம் கவிதை என்றேன்.
நண்பர்கள் சுற்றியிருக்க எனக்கு மட்டும்
புரியும் விழிமொழிகள் வேதம் என்றேன்.

அத்தி பூக்கும் தினங்களில் குழலில் நீ சூடும்
மௌவலின் மணம் மதுரம் என்றேன்.
உயிருருவும் குறுநகையால் என்னைக் 
களவாடிய தருணங்கள் சொர்க்கம் என்றேன்.

பெருங்காவியத்தின் முதல் பத்தியிலே 
இடைமறித்த  கடவுள்  "நீ  கொடுத்து
வைத்தவன்!!!" என்றார். அவர்
கண்களில் பொறாமை இருந்தது...

Sunday, December 5, 2010

தலை விதி

அக்கறை இல்லையென நினைத்தாயா?
என் அன்பு  குறைவென வெறுத்தாயா?
தவணையில் உயிர் பிரிவது போல்
தினம்தினம் உதிர்ந்து சென்றாயே!

விஞ்ஞானம் உன்னை மீட்டாலும்
விலை கொடுக்க முடியவில்லை.       
எதிரொளிப்பு தொல்லைகளால்
வெயிலில் செல்ல முடியவில்லை.

உன்னை வைதல் சொல்லாய்
பயன்படுத்தும் முடிவேந்தர்க்கு
எங்கே புரியப் போகிறது
பிறை நிலவு தலையுடன்
பெண் தேடும் பாடும்,
கண்ணாடி பார்க்கையில்
கவரிமானின் ஏளனச் சிரிப்பும்...