Thursday, March 31, 2011

வளர்சிதை மாற்றங்கள்

சிறு குண்டூசி கீறலுக்கே ஊரைக் 
கூட்டி கதறி அழுதது உண்டு. 
இன்றோ, 
துரோகக் கத்தி கிழித்து பிணமான 
மனதை கூட மறைத்து சிரிக்கிறேன்.

மனம் வருத்திய சிறு கேலிக்கே அம்மா
மடி தேடி புதைந்தது உண்டு.
இன்றோ,
உயிர் நொறுக்கிய பொய்களைக் கூட
உணர்வில்லாமல் பொறுக்கிறேன்.  

உயிரைக் கொடுக்கும் உறவுகளையும்,
மெய்யன்பை மட்டும் கண்டது உண்டு.
இன்றோ,
பகட்டுச் சமூகத்தில் சுயநல அன்பை
இனம் காண முடியாமல் தவிக்கிறேன்.

வதைகளும் வசந்தமும் கலந்தது தான்
வாழ்வென்பதை காலம் கற்றுத் தந்தது.
காயங்களுக்கெல்லாம் காலம் மருந்து
என வாழ்க்கை சொல்லித் தந்தது...