Tuesday, December 14, 2010

கடவுள் ஏன் கடுப்பானார்?

நகர்வலம் வந்த கடவுளும் நானும்
நலம் விசாரித்துக் கொண்டோம் .  
அவரது படைப்பில் நான் வெகுவாக
ரசித்தவை பற்றி சொல்லச் சொன்னார்.

உறை மீளும் வாளின் ஓலியைப் போன்று  நீ
"ம்ம்க்கும்ம்"  சொல்வது பிடிக்கும் என்றேன்.
மேற்கத்திய உடையிலும் நெற்றியில் சிரிக்கும்
மெலிதான பொட்டினை ரசிப்பேன் என்றேன்.

அரக்கு பட்டுச் சேலையில் நான் பார்த்த
முதல் வெட்கம் கவிதை என்றேன்.
நண்பர்கள் சுற்றியிருக்க எனக்கு மட்டும்
புரியும் விழிமொழிகள் வேதம் என்றேன்.

அத்தி பூக்கும் தினங்களில் குழலில் நீ சூடும்
மௌவலின் மணம் மதுரம் என்றேன்.
உயிருருவும் குறுநகையால் என்னைக் 
களவாடிய தருணங்கள் சொர்க்கம் என்றேன்.

பெருங்காவியத்தின் முதல் பத்தியிலே 
இடைமறித்த  கடவுள்  "நீ  கொடுத்து
வைத்தவன்!!!" என்றார். அவர்
கண்களில் பொறாமை இருந்தது...

Sunday, December 5, 2010

தலை விதி

அக்கறை இல்லையென நினைத்தாயா?
என் அன்பு  குறைவென வெறுத்தாயா?
தவணையில் உயிர் பிரிவது போல்
தினம்தினம் உதிர்ந்து சென்றாயே!

விஞ்ஞானம் உன்னை மீட்டாலும்
விலை கொடுக்க முடியவில்லை.       
எதிரொளிப்பு தொல்லைகளால்
வெயிலில் செல்ல முடியவில்லை.

உன்னை வைதல் சொல்லாய்
பயன்படுத்தும் முடிவேந்தர்க்கு
எங்கே புரியப் போகிறது
பிறை நிலவு தலையுடன்
பெண் தேடும் பாடும்,
கண்ணாடி பார்க்கையில்
கவரிமானின் ஏளனச் சிரிப்பும்...

Tuesday, November 30, 2010

கீழ்வானமும் என் வானமும்

அகல் விளக்குகளின்  திருநாளன்று 
கதிரவன் கடல் கரையும் மாலையில் 
மகிழ்ச்சித் தோரண வீதியில் நீயும்,
நானும் நடந்து கொண்டிருந்தோம்.

பனிவாடை சாமரம் வீசிய
மனையொன்றின் முற்றத்தில்,
பட்டாடை உடுத்திய சிறுமி ஒருத்தி
எட்டுப் புள்ளி கோலமிட்டு அதில்
எழில்மிகு வண்ணமிட்டு அதன் கீழே
"கார்த்தி" என எழுதிக்  கொண்டிருந்தாள்.

"கார்த்தி பாப்பா, நீ போட்ட கோலம்
ரொம்ப அழகா இருக்கு!!!" என்று
மழலை மொழியில் கூறி, உன்
சாதூர்யத்திற்கு நீயே சபாஷ் சொன்னாய்.
நடப்பது புரியாமல் விழித்தவாறே சிறுமி
"கார்த்திகை தீபம்" என எழுதி முடித்தாள்.

அழகியலின் உச்சத்தை உள்ளுக்குள் ரசித்து
கேலி செய்த என் கண்களைத் தவிர்க்க
நாணத்தில் நிலம் நோக்கிய உன்னைப் 
போல் அந்தி வானமும் சிவந்திருந்தது...

Monday, November 15, 2010

நேசபுரத்து தேவதை

நெல்லையப்பர் கோவிலில்
அர்ச்சனை செய்த விபூதி, 
ராகுகால பூஜையில் பெற்ற 
ஆயிரத்தம்மன் குங்குமம்,
சனி தோறும் விரதமிருந்த 
ஆஞ்சநேயர் செந்தூரம்,
என ஒவ்வொன்றாய், விடுமுறை
முடிந்து திரும்பிய தினத்தில்,
மென்சோகம் மறைத்து நகைத்த
அம்மா என் நெற்றியில் பூசிய போது
அவளின் பாசம் போல் அவைகளும்
பொன்னிறமாய் மாறியிருந்தன...

Wednesday, November 3, 2010

ஏனோ என் கணவா?

மெய் வருத்தி செய்த பணி
மெச்சப்படாமல் போகையில்
மென்மையாய் சிரித்தீர்கள்.

மதிப்புமிகு வாடிக்கையாளரின்
வார்த்தை தடிக்கையில்
பணிவாய்ப் பொறுத்தீர்கள்.

தவறிழைத்த  ஊழியனைத் 
திருத்துகையில் கூட தங்கள்
தன்மை மாறவில்லை.

ஆனால்,
என் காதல் குழைத்த சாம்பாரில்
காரம் குறைகையில் மட்டும்
கடிவதேனோ?

Saturday, October 30, 2010

இசையோடிணைந்த வாழ்வு

விடிகாலை பூசாரி, வியர்வை சிந்தும் ஆசாரி,
எல்லைப் போராளி, நள்ளிரவு உழைப்பாளி ,    
சிகையழகு கலைஞன், கணினி இளைஞன்,
என எல்லோர் வாழ்விலும்
பக்திப் பாடலாக, பண்பலை கீதமாக
பதிவுத் தகடாக இசை
நீக்கமற நிறைந்துள்ளது.

என்  இயந்திர வாழ்விலும்
இசைப்பஞ்சம் வரப் போவதில்லை, 
என்னிடத்தில்
'அப்புறம்' மற்றும் அலைபேசியும்,
உன்னிடத்தில்
அந்நாள் சம்பவக் கதைகளும் 
இருக்கும் வரையில்...

Wednesday, October 20, 2010

ஒற்றைப் பனை

அப்பாவின் மடியில் அமர
சண்டையிடும் குட்டித் தங்கை,
அளவில்லா செல்லம் தந்து
அரவணைக்கும் அன்பு அண்ணன்,
சீருடை அணிவித்து சின்னதாய்
கண்டிக்கும் அழகு அக்கா,
பஞ்சு மிட்டாய் பஞ்சாயத்திற்காய் 
கிள்ளி வைக்கும் குறும்பு தம்பி,
என எவருமில்லா தனி வீட்டில்
செப்புச் சாமான்கள் மற்றும்
பொம்மைகளுடன் எதிர் வீட்டைப் 
பார்த்து ஏங்கிக் கொண்டிருந்தாள்
ஒற்றையாய் பிறந்த ஷ்ரேயா குட்டி..

Sunday, October 3, 2010

வலியது உன் விழியது

தரையில் படுக்க வைத்து
நெற்றிப்  பொட்டில் தண்ணீரை
சொட்டு சொட்டாய் ஊற்றுதல் ,
உணவு உறக்கம் மறுத்தல்,
கழுவேற்றுதல் என விதவிதமாய்
தண்டனைகள் பல உண்டு. 
ஆனால், 
கருட புராணம் கூட
கண்டிராத சித்ரவதை,
உன் கயல்விழிகளின்
நடன உற்சவத்தின் போது
உன் செவ்வாய் கவிதைகளை
கவனிக்கச் சொல்வது...

Thursday, September 23, 2010

மனிதம் வென்ற அவசரம்

நெரிசல் மிகுந்த சந்திப்பு ஒன்றில்
நலிந்து போன சிறுமி ஒருத்தி
உறுமும் வாகனங்களுக்கு மத்தியில்
சிறு வளையத்துடன்  வித்தை
காட்டிக்  கொண்டு இருந்தாள்.
ஈரம் கசிந்து எடுத்த சில்லறைகளை
கொடுப்பதற்குள் கடந்து விட்டார்கள்.
எல்லோரும் விரும்பிய பச்சை விளக்கு
அவள் சிற்றுணவிற்கு மட்டும்
சிவப்பு விளக்காய்...

Sunday, September 12, 2010

அழைப்பு

மரணத்திற்குப்  பிறகு
ஆன்மா எங்கே  செல்லும்
எனத் தெரியவில்லை.
ஆனால்,
வாகனத்தில் செல்லும் போது 
வேகமுள் எல்லையைக் கடக்கும்
எல்லாத் தருணங்களிலும் தெரிகிறது
விபத்தில் மரித்த நண்பனின் முகம்.

Thursday, September 9, 2010

ஊமைக் கனவுகள்

கீழே மேலே செல்லாமல்
வறுமைக் கோட்டிற்குள் வாடகை
இருக்கும் நடுத்தரக் குடும்பங்கள்.
தினமும் மலர்ந்து சருகாகும்
ஈசலைப் போன்றது எங்கள் கனவுகள்.

பட்டுப் புடவை மீதான அம்மாவின் ஏக்கம்
தொடர் நாடகங்களின் கண்ணீராய் கரைகிறது.

புது வாகனம் வாங்கும் அப்பாவின் ஆசை முன்பு
பாட்டியின் மருத்துவச் செலவு பல் இளிக்கிறது.

குட்டித்தம்பியின் இன்பச் சுற்றுலாவிற்கு
குடக்கூலி வந்து குடைச்சல் தருகிறது.

தாவணிக்கனவுகளுடன் தங்கைகள் இருப்பதால்
அண்ணனின் காதல் அடகு வைக்கப்படுகிறது.

கேக் வெட்ட ஆசைப்படும் பிறந்த நாட்கள்
ஆரஞ்சு மிட்டாயுடன் அமைதியடைகிறது.

தினசரி குளிக்கும் ஆசை கூட
தண்ணீர் வண்டியின்  பின்னால்
வரிசையில்  காத்திருக்கிறது.

விரக்திகளில் வீழாமல்,
விடியலுக்காய் போராடும் 
எங்களின் நம்பிக்கை 
அரிதாக அருளும் கடவுளும்,
அடுத்த தலைமுறைக்  கல்வியும்...

Sunday, August 29, 2010

ஒரு மென்பொறியாளன் புலம்பல்

விடிகாலை விழித்து, வெந்நீரில் குளித்து,
வேகாத உணவினை விரும்பாமல் புசித்து,
வாகன நெரிசலில் சாரலில் நனைந்து,
வேண்டா  வெறுப்புடன் தொடங்குகிறது  அந்நாள்.

புரியாத மொழி பேசும் கணினியை முறைத்து,
பிழையான வேலைக்காய் தன்மானம் தொலைத்து,
உறவுகள் மறந்து உழைப்பதன் பலன்
மூக்குக்கண்ணாடியும், கொஞ்சம் முதுகு வலியும்.

பணி நிமித்தமாய் வெளிநாடு சென்ற நண்பன்
புதுப்புது இடங்களில் விதவிதமாய்
ஃபேஸ்புக்கில்  சிரிக்க, பெங்களுரைத் தாண்டாத
விரக்திகள்  எரிச்சலைக்  கிளப்புகிறது.

சென்னை வெயிலின் திடீர் மழையைப் போல
சென்ற வாரம் பணியில் சேர்ந்த தேவதைக்கு
காதலன் இருப்பதாய் கேட்டறிந்த உடனே
பளிச்சென எறிந்த பல்புகள் அணைகிறது.

பாசமாக பேசும்,  பணிச்சுமை திணிக்கும்,
உயர்வாகப் பேசி குறைவாக மதிப்பிடும்,
அன்பான மேலாளரிடம்  கேட்க தோன்றுகிறது
"நீங்க நல்லவரா? கெட்டவரா ?".

அலுவலக அரசியல் புரியாமல் விழித்து,
அறிவுக்கெட்டா தர்க்கங்களில் 'புரிந்தது'
போல நடித்து, வீட்டிற்கு செல்வதற்குள்
"செல்லமே" கூட முடிந்து விடுகிறது. 


செம்மறி ஆடுகள்
பலிக்காக நேந்து விடப்படுகின்றன.
மென்பொறியாளர்கள்
பணிக்காக நேந்து விடப்படுகிறார்கள்.

Friday, May 28, 2010

ஏதேன் தோட்டத்து கதை

ஆதாமுக்கும் ஏவாளுக்கும் நிச்சயதார்த்தம்
அடுத்த மாத இறுதியில் சுபமுகூர்த்தம்
ஆனந்த வைபோகத்தின் ஆரம்ப விதை
இது சந்தோஷக்காலத்து நிகழ்வுகளின் கதை.

தமிழில் தொடங்கி செப்பு மொழிகள் பத்தாமல்
அலுவலகத்தில் 'ஜாவா'விலும்  ஏவாள் பெயர்
எழுதிப் பார்த்த வழக்கில்  மேலாளரிடம்
அசட்டுப்  புன்னகை புரிகிறான் ஆதாம். 

மணநாளில் அணிய வேண்டிய நகை,
புடவை, அலங்காரங்களைப் பற்றி
அளவில்லா முனைப்புடன் சானியா மிர்சா
போல சிந்தனை செய்கிறாள் ஏவாள்.

"மடிவதாயினும் மது, மாமிசம் உண்பேன்" என்று
குடிகாரர்கள் சபையில் உறுதி  பூண்ட  ஆதாம்,
நண்பன் கொடுத்த  மது  விருந்தில் கூட ஏவாள்
சைவம் என்பதால் ஆப்பிள் மட்டுமே தின்கிறான்.

நுண்ணறிவுடனும், நினைவுத்திறனுடனும்
இருந்த ஏவாள் கொடியில் காயும் துணியுடன்
தனியாக நகைத்து பேசுவதைப் பார்த்து
அச்சமடைகிறார்கள் ஏவாளின் அறைத்தோழிகள்.

வங்கியில் சேமித்த பணம் அலைபேசி கட்டணத்திற்கே
பத்தவில்லை என்பதால் திருமணத்திற்கு
கடன் வாங்க கலாநிதி மாறன் வீட்டில் காத்திருக்கிறார்
இருவரையும் படைத்த அப்பாவி கடவுள்...

Thursday, May 13, 2010

பெண் என்பவள் என்னவள்

ஆள் அரவமில்லா  சாலையைக்
கடக்கையிலே தூரத்து ஒலிப்பான்
சத்தத்திற்கு நீ என் கைகளை இறுகப்
பற்றியதன் பெயர் 'அச்சம்' என்றால், 

பத்து நிமிடமாய் பதில் வராத
குறுந்தகவலுக்காய் பல நூறு முறை
என்னை மனதுக்குள் திட்டிய
பகைமையின் பெயர் "மடைமை" என்றால்,

அணிந்த புதுப் புடவையை என்னிடம்
காட்டி 'அழகாய் உள்ளதா?' எனக்கேட்டு
கன்னம் சிவக்க கண் பார்க்க
தவிர்ப்பதன் பெயர் "நாணம்" என்றால்,
 
விரக்தியின் வலி விழியைக்
கடப்பதற்குள் அன்னையைப்
போல் அரவணைக்கும்
மென்மையின் பெயர் 'பயிர்ப்பு' என்றால்,

வேதங்கள் கூறும் பெண்ணும்
உன்னைப் போல் இனியவளாக
இருந்திருக்கக் கூடும் என்றே
நம்பத் தோன்றுகிறது...

Monday, May 10, 2010

ஒரு 'டூக்காவும்' ஒரு 'பழமும்'

அன்பின் உச்சம் கோபம் என்பதால்
அம்மா அப்பாவிற்குள் சண்டைகள் புதிதல்ல.

வேதனையோடு விடிகிறது அந்த பொழுது.
எதிர்பார்ப்புகள் தந்த ஏமாற்றங்கள்
கடும் சொற்களாய் வெடிக்கிறது,
வாக்குவாதங்களின் தீவிரத்தில்
இருவருமே சளைக்கவில்லை.
கோபங்கள் கொட்டிய பின்பு
மௌனங்கள் மட்டுமே மிச்சம்.
விதைத்தவர்கள் மோதலில்
வெப்பம்  என்னைத்  தாக்குகிறது.
விவரம் அறியாத மருத்துவர் அதை
கடுங்குளிர்க் காய்ச்சல் என்கிறார்.
என்னைப் பார்த்து  அழும் அம்மாவை
அன்பாக தேற்றுகிறார் அப்பா,
சற்று முன்பு நடந்த யுத்தம்
சத்தமில்லாமல் முகவரி தொலைக்கிறது.
இது தான் இல்லறம் என்பது
விளங்காமல் விழிக்கிறேன் நான். 

மன்னிப்பின்றி மடியும் சண்டைகள்
புரிவதில் அம்மா அப்பாவும்
சிறு பிள்ளைகள் தான் போல!

Sunday, April 11, 2010

ஓர் மின்வெட்டின் போது...

அது ஒரு கோடை கால இரவு,
முன்னறிவிப்பின்றி மின்விளக்குகள் அணைந்து
மின்வெட்டு உலகிற்கு அறிவிக்கப்படுகிறது,
பிரிதலின் போது பாசம் புரிவதைப் போல
மின்சாரத்துடனான நமது பந்தம் உணரப்படுகிறது.

அலுவலகப் பிரச்சனையை அலசியவாறே
மொட்டை மாடியில் தென்றலை
ரசிக்கிறார்கள் அப்பாக்கள்.

வீட்டுத் திண்ணையின் மகளிர் மாநாட்டில்
தொடர் நாடகங்களின் நிலவரங்களை
விவாதிக்கிறார்கள் அம்மாக்கள்.

"இங்கே மின்வெட்டு, அங்கே?" என
கல்லூரி நண்பனை குறுந்தகவலில்
வினவுகிறார்கள் இளம்பெண்கள்.

விறுவிறுப்பான கிரிக்கெட் ஆட்டத்தை பார்க்க
முடியாததால் மின்சார வாரியத்தை
சபிக்கிறார்கள் இளைஞர்கள்.

மருமகளை மனதுக்குள் திட்டியவாறே
தொட்டிலில் அழும் பேரக்குழந்தையை
தாலாட்டுகிறார்கள் பாட்டிகள்.

நடுவயது கதைகளை நண்பர்களுடன்
பகிர்ந்தவாறே பக்கத்து பூங்காவில்
நடக்கிறார்கள் தாத்தாக்கள்.

வீட்டுப் பாடத்திலிருந்து தப்பிய
மகிழ்ச்சியில் உற்சாகத்துடன்
விளையாடுகிறார்கள் குழந்தைகள்.

இன்பச் சுற்றுலா முடிந்து திரும்புவது போல
எரியும் விளக்குகளில் மீண்டும்
தொடங்குகிறது நம் மின்சார வாழ்வு. 

Sunday, April 4, 2010

உறங்க மறந்த இரவுகள்

பத்தரை மணிக்குள் பாதி
நித்திரையைக் கடந்தது ஒரு காலம்.
இப்போதெல்லாம் 
உலகத்தை எழுப்பும் சேவல் தான்
என்னை தூங்க வைக்கிறது.

உன் இதழ் கடந்து வந்ததால் அலுத்துப் போன
நகைச்சுவைக்கும் சிரிப்பு வருகிறது.
என் வாழ்க்கைக் கதைகள் கூட நீ
விரும்பி கேட்பதால் வரலாறாய்த் தெரிகிறது.

இந்தியப் பொருளாதரத்தைக் கூட
இவ்வளவு நேரம் ஆராய்ந்திருக்க மாட்டார்கள்.
ஆனால் என்ன பேசப் போகிறோம்  என்றே 
நள்ளிரவில் தான் நாம் முடிவெடுக்கிறோம்.

ராட்டினத்தின் உச்சியை அடைந்ததும்
மின்சாரத்தை நிறுத்துவது போல,
ஒவ்வொரு முப்பது நிமிடங்களிலும்
இணைப்பைத் துண்டிக்கிறது
இங்கிதம் தெரியாத ' வோடஃபோன் '.

விரைவாக விடிந்ததால் இயற்கை சபிக்கப்படுகிறது
தொலைத்த உறக்கம் அலுவலகத்தில் துயிலப்படுகிறது.

Monday, March 29, 2010

குற்றம் - நடந்தது என்ன ?

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு
அதிகமானதால் இறந்ததாக 
அந்த தேனீயின்
பிரேதப் பரிசோதனை முடிவில்
தெரிய வந்தது.
ஒரு வேளை  அது
மடியும் முன்பு உன்னை
கடித்திருக்குமோ ???

Saturday, March 20, 2010

புரியாத புன்னகை

அலை பேசியில்
தவறிய அழைப்புகளில்  கூட
உன்  பெயர் பார்த்து 
நான் நகைப்பதை வியக்கும்
எவருக்கும் புரியப் போவதில்லை
ஆனந்தம் என்பது
நீ
என்னுடன் பேசுவதால் மட்டுமல்ல,
பேச வேண்டும் என்று நினைப்பதால்...

Saturday, March 6, 2010

நகர் உலா - திருநெல்வேலி

நான் பிறந்த ஊரினிலே
வசந்தத்திற்கு வாசம் உண்டு
வஞ்சத்திற்கு பஞ்சம் உண்டு
கொஞ்ச நேர கோபம் உண்டு
கொஞ்சுகின்ற தமிழும் உண்டு

அர்ப்பணிப்புள்ள பக்தி உண்டு
அறம் தவறா வீரம் உண்டு
உயிரைக் கொடுக்கும் நட்பு உண்டு
உண்மை பேசும் உறவும் உண்டு

வந்தாரை வரவேற்கும் பண்பாடு உண்டு
வத்ஸரகலா பட்டெடுக்க 'போத்திஸ்' உண்டு
வ.உ.சி மைதானத்தில் விடலைகள்  உண்டு
வற்றாத ஜீவநதி தாமிரபரணியும்  உண்டு

இருட்டுக் கடை அல்வா போல
இனிக்கின்ற இதயங்கள் உண்டு.
குற்றாலச் சாரல் போல
மாசில்லாக் காதல்கள் உண்டு.

ஏட்டுச் சுரைக்காய் போலில்லாமல்
சிந்திக்க வைக்கும் கல்வி உண்டு.
தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என்ற
தனிப் பெருமையும் இங்கு உண்டு.

கடல் கடந்து சென்றாலும்
கலாச்சாரம் நெஞ்சில் உண்டு.
அச்சம் மடம் மறந்தாலும்
வெட்கம் இன்னும் மிச்சம் உண்டு.

எங்கள் ஊரில் எல்லாம் உண்டு.
ஆனால்,
அன்பிற்கு மட்டும் அளவே இல்லை...

 

Sunday, February 28, 2010

அவள் பெயர் தோழி

அவளைப்  பற்றி எழுதத் தொடங்கி
ஒவ்வொரு முறையும் தோற்று போகிறேன்.
அனைத்து  அகராதிகள்  அலசியும்
அன்பைத் தவிர  வேறு வார்த்தை கிடைக்கவில்லை.

எவ்வளவு விளக்கியும் புரியாத  மடத்தனமும்,
எதுவுமே சொல்ல விட்டாலும் அடிமனதின்
வலிகளை புரிந்து கொள்ளும் பக்குவமும்
முரணாகவே இருந்தாலும் அழகாக இருக்கிறது.

எங்களுக்குள்  சண்டை வரும் போதெல்லாம்
விட்டுக்  கொடுத்து  திணற வைப்பாள்.
மற்றவர்கள் வாதத்தில் என்னை
விட்டுக் கொடுக்காமல்  உணர வைப்பாள்.

காயப்படுத்தாத வார்த்தைகளால் திட்டத் தெரிந்தவள்.
காயங்களைக்  குணப்படுத்தும் வித்தை அறிந்தவள்.
குற்றங்களை மறக்கும் குழந்தை போன்றவள்.
அக்கறை காட்டுவதில் அன்னைக்கு நிகரவள்.

தெரிதலில்  தொடங்கி புரிதலில் வளர்ந்து
பகிர்தலில் வாழ்கிறது அவளது நட்பு.

Sunday, January 17, 2010

சந்தோஷப் பொய்கள்

 அடைமழையின் பிடிவாதத்துடன் நீ
அழகாக உரையாடுவாய்,
ஆனந்தப் பரவசத்தில்
அடங்கிப் போகும் என் வார்த்தைகள்.

உன் மதிநூட்ப தர்க்கங்கள்
மழை நேர தேநீர் ரசனை,
மழலை கொஞ்சும் உன் கோபம்
குளிர் இரவின் கம்பளியின் வெப்பம்,

உன்னுடன் உணவருந்திய அன்று
பிறவிப்பயன்  அடைந்தன பதார்த்தங்கள்,
நொடிகள் யுகங்களாய்  உன் பிரிவில்
மாறிப் போயின யதார்த்தங்கள்.

நீ குழலில் சூட  மறுத்ததில்
மேகங்கள் எல்லாம் கோபத்தில்,
உன்னை மகிழ்வித்த மகிழ்ச்சியில்
பொய்கள் எல்லாம் சொர்க்கத்தில்.

இன்னும் தீர்ந்த பாடில்லை
குயில் உனக்கு
பின்னணிக்குரல்  கொடுக்கிறதா
என்ற சந்தேகமும்
உன் மீது நான் கொண்ட
பேரன்பும்..

நடமாடும் நித்திலமே,
இன்பத்திற்கும் துன்பத்திற்கும்
ஓர் எல்லை உண்டு.
நீ
எல்லை தாண்டிய பயங்கரவாதி...

Saturday, January 2, 2010

நள்ளிரவு லட்சியம்

அன்று, பனி பொழியும் இரவு
பாதி தூரம் பயணித்திருக்கும்,
சார்பியல் கொள்கையின் நீண்ட இரவில்
விழித்த இமைகளுடன்
எரிமலையின் மண்புழுவைப் போல
பசித்த வயிறுடன்
நெளிந்து கொண்டிருக்கிறேன்.
அழுவதற்கான கண்ணீரும்
தண்ணீரைப் போல வற்றி விட்டது.
புழுதி மண்டிய நகரச் சாலையின்
சாக்கடை விளிம்பில்
மெலிந்த தேகத்துடன்,
ரணமான  கால்களுடன்,
அலைந்து கொண்டிருக்கிறேன்
உலகின் மகத்துவமான பசியைப்
போக்கும் உணவைத் தேடி...
மூன்று வேளை வயிராற உண்ணும்
உங்களுக்கு என் தேடல்
சாதாரணமாகத் தெரியலாம்
ஆனால்
எனக்கோ நள்ளிரவு லட்சியம்