Saturday, October 30, 2010

இசையோடிணைந்த வாழ்வு

விடிகாலை பூசாரி, வியர்வை சிந்தும் ஆசாரி,
எல்லைப் போராளி, நள்ளிரவு உழைப்பாளி ,    
சிகையழகு கலைஞன், கணினி இளைஞன்,
என எல்லோர் வாழ்விலும்
பக்திப் பாடலாக, பண்பலை கீதமாக
பதிவுத் தகடாக இசை
நீக்கமற நிறைந்துள்ளது.

என்  இயந்திர வாழ்விலும்
இசைப்பஞ்சம் வரப் போவதில்லை, 
என்னிடத்தில்
'அப்புறம்' மற்றும் அலைபேசியும்,
உன்னிடத்தில்
அந்நாள் சம்பவக் கதைகளும் 
இருக்கும் வரையில்...

Wednesday, October 20, 2010

ஒற்றைப் பனை

அப்பாவின் மடியில் அமர
சண்டையிடும் குட்டித் தங்கை,
அளவில்லா செல்லம் தந்து
அரவணைக்கும் அன்பு அண்ணன்,
சீருடை அணிவித்து சின்னதாய்
கண்டிக்கும் அழகு அக்கா,
பஞ்சு மிட்டாய் பஞ்சாயத்திற்காய் 
கிள்ளி வைக்கும் குறும்பு தம்பி,
என எவருமில்லா தனி வீட்டில்
செப்புச் சாமான்கள் மற்றும்
பொம்மைகளுடன் எதிர் வீட்டைப் 
பார்த்து ஏங்கிக் கொண்டிருந்தாள்
ஒற்றையாய் பிறந்த ஷ்ரேயா குட்டி..

Sunday, October 3, 2010

வலியது உன் விழியது

தரையில் படுக்க வைத்து
நெற்றிப்  பொட்டில் தண்ணீரை
சொட்டு சொட்டாய் ஊற்றுதல் ,
உணவு உறக்கம் மறுத்தல்,
கழுவேற்றுதல் என விதவிதமாய்
தண்டனைகள் பல உண்டு. 
ஆனால், 
கருட புராணம் கூட
கண்டிராத சித்ரவதை,
உன் கயல்விழிகளின்
நடன உற்சவத்தின் போது
உன் செவ்வாய் கவிதைகளை
கவனிக்கச் சொல்வது...