Thursday, January 27, 2011

சிறுகைச் சித்திரம்

சதுரப் பரப்பின் நடுவே சிறு வனமும்
அங்கே கருநிறப் புற்களும் இருந்தன.
மஞ்சள் கண் பூணை, குட்டி வால்
எலியை துரத்திக் கொண்டிருந்தது.
குட்டை முடி பாப்பா ஒரு குரங்கிற்கு
வழி சொல்லிக் கொண்டிருந்தாள்.
வண்ணக்  கவச முகமூடி வீரர்கள்
பறந்து போரிட்டு கொண்டிருந்தனர்.
தன் படைப்பினைக்  கண்டு குதூகலித்த
ஐந்து வயது பிரம்மாவை சுவரில்
கிறுக்கியதற்காக அம்மா அடித்தாள்.
பொங்கலுக்கு வீட்டை பொலிவாக்குவதாய்
நினைத்து பிகாசாவைப் பகைத்தார்கள். 
தை முடிவதற்குள் அச்சுவர் முழுவதும் 
அடர் வனம் கிளை விட்டிருந்தது...


Tuesday, January 11, 2011

போதைப் புத்தாண்டு

நள்ளிரவிற்காய் வானம் காத்திருந்தது.
நாகரீகம் மேற்கே பார்த்திருந்தது.
மனிதத் தலைகள் சாலை மூடியிருந்தது.
போதை நிலைகள் தலை தாண்டியிருந்தது.

அரைகுறை மங்கையர் ஆட்டத்தில்
தெறிக்கும் இசை செவி கிழித்தது.
உற்சாக வெறியின் வேகத்தில்
உயிர் பலியின் சத்தம் மறைந்தது.

கலாச்சாரமும், மெய் மகிழ்ச்சியும்
மடிந்து மிதி பட்டிருந்தது.
காலி மதுக்குடுவைகள் குவிந்திருந்த
இடத்தில் 'மகாத்மா காந்தி சாலை' 
என்று எழுதியிருந்தது . . .