Sunday, August 29, 2010

ஒரு மென்பொறியாளன் புலம்பல்

விடிகாலை விழித்து, வெந்நீரில் குளித்து,
வேகாத உணவினை விரும்பாமல் புசித்து,
வாகன நெரிசலில் சாரலில் நனைந்து,
வேண்டா  வெறுப்புடன் தொடங்குகிறது  அந்நாள்.

புரியாத மொழி பேசும் கணினியை முறைத்து,
பிழையான வேலைக்காய் தன்மானம் தொலைத்து,
உறவுகள் மறந்து உழைப்பதன் பலன்
மூக்குக்கண்ணாடியும், கொஞ்சம் முதுகு வலியும்.

பணி நிமித்தமாய் வெளிநாடு சென்ற நண்பன்
புதுப்புது இடங்களில் விதவிதமாய்
ஃபேஸ்புக்கில்  சிரிக்க, பெங்களுரைத் தாண்டாத
விரக்திகள்  எரிச்சலைக்  கிளப்புகிறது.

சென்னை வெயிலின் திடீர் மழையைப் போல
சென்ற வாரம் பணியில் சேர்ந்த தேவதைக்கு
காதலன் இருப்பதாய் கேட்டறிந்த உடனே
பளிச்சென எறிந்த பல்புகள் அணைகிறது.

பாசமாக பேசும்,  பணிச்சுமை திணிக்கும்,
உயர்வாகப் பேசி குறைவாக மதிப்பிடும்,
அன்பான மேலாளரிடம்  கேட்க தோன்றுகிறது
"நீங்க நல்லவரா? கெட்டவரா ?".

அலுவலக அரசியல் புரியாமல் விழித்து,
அறிவுக்கெட்டா தர்க்கங்களில் 'புரிந்தது'
போல நடித்து, வீட்டிற்கு செல்வதற்குள்
"செல்லமே" கூட முடிந்து விடுகிறது. 


செம்மறி ஆடுகள்
பலிக்காக நேந்து விடப்படுகின்றன.
மென்பொறியாளர்கள்
பணிக்காக நேந்து விடப்படுகிறார்கள்.

Friday, May 28, 2010

ஏதேன் தோட்டத்து கதை

ஆதாமுக்கும் ஏவாளுக்கும் நிச்சயதார்த்தம்
அடுத்த மாத இறுதியில் சுபமுகூர்த்தம்
ஆனந்த வைபோகத்தின் ஆரம்ப விதை
இது சந்தோஷக்காலத்து நிகழ்வுகளின் கதை.

தமிழில் தொடங்கி செப்பு மொழிகள் பத்தாமல்
அலுவலகத்தில் 'ஜாவா'விலும்  ஏவாள் பெயர்
எழுதிப் பார்த்த வழக்கில்  மேலாளரிடம்
அசட்டுப்  புன்னகை புரிகிறான் ஆதாம். 

மணநாளில் அணிய வேண்டிய நகை,
புடவை, அலங்காரங்களைப் பற்றி
அளவில்லா முனைப்புடன் சானியா மிர்சா
போல சிந்தனை செய்கிறாள் ஏவாள்.

"மடிவதாயினும் மது, மாமிசம் உண்பேன்" என்று
குடிகாரர்கள் சபையில் உறுதி  பூண்ட  ஆதாம்,
நண்பன் கொடுத்த  மது  விருந்தில் கூட ஏவாள்
சைவம் என்பதால் ஆப்பிள் மட்டுமே தின்கிறான்.

நுண்ணறிவுடனும், நினைவுத்திறனுடனும்
இருந்த ஏவாள் கொடியில் காயும் துணியுடன்
தனியாக நகைத்து பேசுவதைப் பார்த்து
அச்சமடைகிறார்கள் ஏவாளின் அறைத்தோழிகள்.

வங்கியில் சேமித்த பணம் அலைபேசி கட்டணத்திற்கே
பத்தவில்லை என்பதால் திருமணத்திற்கு
கடன் வாங்க கலாநிதி மாறன் வீட்டில் காத்திருக்கிறார்
இருவரையும் படைத்த அப்பாவி கடவுள்...

Thursday, May 13, 2010

பெண் என்பவள் என்னவள்

ஆள் அரவமில்லா  சாலையைக்
கடக்கையிலே தூரத்து ஒலிப்பான்
சத்தத்திற்கு நீ என் கைகளை இறுகப்
பற்றியதன் பெயர் 'அச்சம்' என்றால், 

பத்து நிமிடமாய் பதில் வராத
குறுந்தகவலுக்காய் பல நூறு முறை
என்னை மனதுக்குள் திட்டிய
பகைமையின் பெயர் "மடைமை" என்றால்,

அணிந்த புதுப் புடவையை என்னிடம்
காட்டி 'அழகாய் உள்ளதா?' எனக்கேட்டு
கன்னம் சிவக்க கண் பார்க்க
தவிர்ப்பதன் பெயர் "நாணம்" என்றால்,
 
விரக்தியின் வலி விழியைக்
கடப்பதற்குள் அன்னையைப்
போல் அரவணைக்கும்
மென்மையின் பெயர் 'பயிர்ப்பு' என்றால்,

வேதங்கள் கூறும் பெண்ணும்
உன்னைப் போல் இனியவளாக
இருந்திருக்கக் கூடும் என்றே
நம்பத் தோன்றுகிறது...

Monday, May 10, 2010

ஒரு 'டூக்காவும்' ஒரு 'பழமும்'

அன்பின் உச்சம் கோபம் என்பதால்
அம்மா அப்பாவிற்குள் சண்டைகள் புதிதல்ல.

வேதனையோடு விடிகிறது அந்த பொழுது.
எதிர்பார்ப்புகள் தந்த ஏமாற்றங்கள்
கடும் சொற்களாய் வெடிக்கிறது,
வாக்குவாதங்களின் தீவிரத்தில்
இருவருமே சளைக்கவில்லை.
கோபங்கள் கொட்டிய பின்பு
மௌனங்கள் மட்டுமே மிச்சம்.
விதைத்தவர்கள் மோதலில்
வெப்பம்  என்னைத்  தாக்குகிறது.
விவரம் அறியாத மருத்துவர் அதை
கடுங்குளிர்க் காய்ச்சல் என்கிறார்.
என்னைப் பார்த்து  அழும் அம்மாவை
அன்பாக தேற்றுகிறார் அப்பா,
சற்று முன்பு நடந்த யுத்தம்
சத்தமில்லாமல் முகவரி தொலைக்கிறது.
இது தான் இல்லறம் என்பது
விளங்காமல் விழிக்கிறேன் நான். 

மன்னிப்பின்றி மடியும் சண்டைகள்
புரிவதில் அம்மா அப்பாவும்
சிறு பிள்ளைகள் தான் போல!

Sunday, April 11, 2010

ஓர் மின்வெட்டின் போது...

அது ஒரு கோடை கால இரவு,
முன்னறிவிப்பின்றி மின்விளக்குகள் அணைந்து
மின்வெட்டு உலகிற்கு அறிவிக்கப்படுகிறது,
பிரிதலின் போது பாசம் புரிவதைப் போல
மின்சாரத்துடனான நமது பந்தம் உணரப்படுகிறது.

அலுவலகப் பிரச்சனையை அலசியவாறே
மொட்டை மாடியில் தென்றலை
ரசிக்கிறார்கள் அப்பாக்கள்.

வீட்டுத் திண்ணையின் மகளிர் மாநாட்டில்
தொடர் நாடகங்களின் நிலவரங்களை
விவாதிக்கிறார்கள் அம்மாக்கள்.

"இங்கே மின்வெட்டு, அங்கே?" என
கல்லூரி நண்பனை குறுந்தகவலில்
வினவுகிறார்கள் இளம்பெண்கள்.

விறுவிறுப்பான கிரிக்கெட் ஆட்டத்தை பார்க்க
முடியாததால் மின்சார வாரியத்தை
சபிக்கிறார்கள் இளைஞர்கள்.

மருமகளை மனதுக்குள் திட்டியவாறே
தொட்டிலில் அழும் பேரக்குழந்தையை
தாலாட்டுகிறார்கள் பாட்டிகள்.

நடுவயது கதைகளை நண்பர்களுடன்
பகிர்ந்தவாறே பக்கத்து பூங்காவில்
நடக்கிறார்கள் தாத்தாக்கள்.

வீட்டுப் பாடத்திலிருந்து தப்பிய
மகிழ்ச்சியில் உற்சாகத்துடன்
விளையாடுகிறார்கள் குழந்தைகள்.

இன்பச் சுற்றுலா முடிந்து திரும்புவது போல
எரியும் விளக்குகளில் மீண்டும்
தொடங்குகிறது நம் மின்சார வாழ்வு. 

Sunday, April 4, 2010

உறங்க மறந்த இரவுகள்

பத்தரை மணிக்குள் பாதி
நித்திரையைக் கடந்தது ஒரு காலம்.
இப்போதெல்லாம் 
உலகத்தை எழுப்பும் சேவல் தான்
என்னை தூங்க வைக்கிறது.

உன் இதழ் கடந்து வந்ததால் அலுத்துப் போன
நகைச்சுவைக்கும் சிரிப்பு வருகிறது.
என் வாழ்க்கைக் கதைகள் கூட நீ
விரும்பி கேட்பதால் வரலாறாய்த் தெரிகிறது.

இந்தியப் பொருளாதரத்தைக் கூட
இவ்வளவு நேரம் ஆராய்ந்திருக்க மாட்டார்கள்.
ஆனால் என்ன பேசப் போகிறோம்  என்றே 
நள்ளிரவில் தான் நாம் முடிவெடுக்கிறோம்.

ராட்டினத்தின் உச்சியை அடைந்ததும்
மின்சாரத்தை நிறுத்துவது போல,
ஒவ்வொரு முப்பது நிமிடங்களிலும்
இணைப்பைத் துண்டிக்கிறது
இங்கிதம் தெரியாத ' வோடஃபோன் '.

விரைவாக விடிந்ததால் இயற்கை சபிக்கப்படுகிறது
தொலைத்த உறக்கம் அலுவலகத்தில் துயிலப்படுகிறது.

Monday, March 29, 2010

குற்றம் - நடந்தது என்ன ?

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு
அதிகமானதால் இறந்ததாக 
அந்த தேனீயின்
பிரேதப் பரிசோதனை முடிவில்
தெரிய வந்தது.
ஒரு வேளை  அது
மடியும் முன்பு உன்னை
கடித்திருக்குமோ ???

Saturday, March 20, 2010

புரியாத புன்னகை

அலை பேசியில்
தவறிய அழைப்புகளில்  கூட
உன்  பெயர் பார்த்து 
நான் நகைப்பதை வியக்கும்
எவருக்கும் புரியப் போவதில்லை
ஆனந்தம் என்பது
நீ
என்னுடன் பேசுவதால் மட்டுமல்ல,
பேச வேண்டும் என்று நினைப்பதால்...

Saturday, March 6, 2010

நகர் உலா - திருநெல்வேலி

நான் பிறந்த ஊரினிலே
வசந்தத்திற்கு வாசம் உண்டு
வஞ்சத்திற்கு பஞ்சம் உண்டு
கொஞ்ச நேர கோபம் உண்டு
கொஞ்சுகின்ற தமிழும் உண்டு

அர்ப்பணிப்புள்ள பக்தி உண்டு
அறம் தவறா வீரம் உண்டு
உயிரைக் கொடுக்கும் நட்பு உண்டு
உண்மை பேசும் உறவும் உண்டு

வந்தாரை வரவேற்கும் பண்பாடு உண்டு
வத்ஸரகலா பட்டெடுக்க 'போத்திஸ்' உண்டு
வ.உ.சி மைதானத்தில் விடலைகள்  உண்டு
வற்றாத ஜீவநதி தாமிரபரணியும்  உண்டு

இருட்டுக் கடை அல்வா போல
இனிக்கின்ற இதயங்கள் உண்டு.
குற்றாலச் சாரல் போல
மாசில்லாக் காதல்கள் உண்டு.

ஏட்டுச் சுரைக்காய் போலில்லாமல்
சிந்திக்க வைக்கும் கல்வி உண்டு.
தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என்ற
தனிப் பெருமையும் இங்கு உண்டு.

கடல் கடந்து சென்றாலும்
கலாச்சாரம் நெஞ்சில் உண்டு.
அச்சம் மடம் மறந்தாலும்
வெட்கம் இன்னும் மிச்சம் உண்டு.

எங்கள் ஊரில் எல்லாம் உண்டு.
ஆனால்,
அன்பிற்கு மட்டும் அளவே இல்லை...

 

Sunday, February 28, 2010

அவள் பெயர் தோழி

அவளைப்  பற்றி எழுதத் தொடங்கி
ஒவ்வொரு முறையும் தோற்று போகிறேன்.
அனைத்து  அகராதிகள்  அலசியும்
அன்பைத் தவிர  வேறு வார்த்தை கிடைக்கவில்லை.

எவ்வளவு விளக்கியும் புரியாத  மடத்தனமும்,
எதுவுமே சொல்ல விட்டாலும் அடிமனதின்
வலிகளை புரிந்து கொள்ளும் பக்குவமும்
முரணாகவே இருந்தாலும் அழகாக இருக்கிறது.

எங்களுக்குள்  சண்டை வரும் போதெல்லாம்
விட்டுக்  கொடுத்து  திணற வைப்பாள்.
மற்றவர்கள் வாதத்தில் என்னை
விட்டுக் கொடுக்காமல்  உணர வைப்பாள்.

காயப்படுத்தாத வார்த்தைகளால் திட்டத் தெரிந்தவள்.
காயங்களைக்  குணப்படுத்தும் வித்தை அறிந்தவள்.
குற்றங்களை மறக்கும் குழந்தை போன்றவள்.
அக்கறை காட்டுவதில் அன்னைக்கு நிகரவள்.

தெரிதலில்  தொடங்கி புரிதலில் வளர்ந்து
பகிர்தலில் வாழ்கிறது அவளது நட்பு.